மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளுட்டுமானோடை வயல் பகுதியில் வேளாண்மை காவலுக்குச் சென்ற இருவருக்குள் ஏற்பட்ட வாய் தர்க்கத்தையடுத்து, கோடரியால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
இச் சம்பவம் (24) இரவு இடம்பெற்றுள்ளதாகவும், தாக்குதலை மேற்கொண்டவர் தப்பி ஓடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கரடியனாறு உசனார்மலை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய வீரையா விஜயகாந் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
மச்சான் மச்சான் உறவுமுறை கொண்ட இருவரும் நேற்று (24) மாலை வீட்டை விட்டு வெளியேறி புளுட்டுமானோடை பகுதியில் வேளாண்மை காவலுக்காக வயலுக்கு சென்றுஅங்கு சம்பவதினமான இரவு 10 மணியளவில் வாடியில் தங்கியிருந்துள்ள நிலையில், மதுபானம் அருந்திய இருவருக்கும் இடையே வாய்தர்கம் ஏற்பட்டதையடுத்து மனைவியின் சகோதரியின் கணவன் மீது கோடரியால் தாக்குதலை மேற்கொண்டதில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து தாக்குதலை மேற்கொண்டவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்தையடுத்து, அங்கு பொலிஸார் தடயவியல் பிரிவினர் வரவழைக்கப்பட்டு, விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் ஒப்படைப்பதற்காக, நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.