மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கை

ByEditor 2

May 17, 2025

இலங்கை மின்சார சபை 2025 மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் 18.47 பில்லியன் ரூபா நட்டத்தை பதிவு செய்துள்ளதாக, சபை சமீபத்திய நிதி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

2024 மார்ச் காலாண்டில் 84.67 பில்லியன் ரூபா இலாபத்தை சபை பதிவு செய்திருந்த நிலையில், இதனுடன் ஒப்பிடுகையில், இது 121.8% இலாபக் குறைவாகும்.

2024 டிசம்பர் 31 வரை தொடர்ச்சியாக ஐந்து காலாண்டுகளாக இலாபம் ஈட்டிய பின்னணியில், ஒரு காலாண்டில் நட்டத்தை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மின்சார சபையின் வருவாயும் கடந்த காலாண்டில் 167.78 பில்லியன் ரூபாவிலிருந்து 93.92 பில்லியன் ரூபாவாக 44% குறைந்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் வரலாற்றில் ஒரு வருடத்தில் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த இலாபமாக, 2024ஆம் ஆண்டில் 144 பில்லியன் ரூபா பதிவாகியிருந்தது.

அந்த ஆண்டின் நான்கு காலாண்டுகளிலும் சபை இலாபத்தை பதிவு செய்திருந்தமை சிறப்பம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *