பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் விசேட விரைவு ரயில் போக்குவரத்து, திங்கட்கிழமை (10) காலையுடன் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் 1008ஆம் இலக்க விசேட விரைவு ரயில், கம்பளை மற்றும் உலப்பனை ரயில் நிலையங்களுக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை (9) பிற்பகல் தடம்புரண்டதால், மலையக ரயில் பாதையில் பதுளை-கொழும்பு கோட்டை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், திங்கட்கிழமை (10) காலையுடன் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, தடம் புரண்ட ரயிலின் இயந்திரம் சுமார் 270 அடி முன்னோக்கி நகர்ந்து, மலைச்சரிவில் மோதி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் ரயில் தண்டவாளங்களுக்கும் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் ரயில் நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் இன்று (10) காலை வரை நிறுத்தப்பட்டிருந்தாக கூறப்படுகின்றது.