ஆபிரிக்க நத்தைககளால் இலங்கைக்கு பேராபத்து!!

Byadmin

Dec 23, 2024
SONY DSC

ஆபிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெரு மழையின் பின்னர் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் ஏற்கெனவே இங்கு அவதானிக்கப்பட்ட போதும், இப்போது இவற்றின் பெருக்கம் அதிகமாக உள்ளது. பயிர் பச்சைகளையெல்லாம் தின்று தீர்க்கும் இவை, உள்ளூர் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு, நோய்களைப் பரப்பும் கருவிகளாகவும் செயல்படுகின்றன.இவற்றை இப்போதே கட்டுப்படுத்த தவறினால் விரைவில் பேராபத்துகளை விளைவிப்பவையாக அமையும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஐங்கரநேசன் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் (African Giant Snail- Lissachtina fulica) பிரித்தானியர் ஒருவரால் பின் விபரீதங்கள் புரியாமல் இலங்கைக்குள் எடுத்துவரப்பட்ட ஓர் அந்நிய இனம். ஒரு நத்தையிலேயே ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள் இரண்டும் இருப்பதால் இரண்டு நத்தைகள் சோடி சேரும் போது இரண்டுமே முட்டைகளை உருவாக்குகின்றன.சராசரியாக 5 தொடங்கி 6 ஆண்டுகள் வரை வாழ்கின்ற ஒரு நத்தை தன் ஆயுளில் 1000க்கும் அதிகமான முட்டைகளை இடுகின்றன. அந்நிய இனமான இவற்றை இரையாக்க இலங்கையின் இயற்கைச் சூழலில் இரை கௌவிகள் எதுவும் இல்லை. இதனால் பல்கிப்பெருகி இப்போது ஓர் ஆக்கிரமிப்பு இனமாக உருவெடுத்துள்ளது.

உலகின் உயிர்ப்பல்வகைமையின் அழிவுக்கு அந்நிய ஊடுருவல் இனங்களும் ஒரு பெரும் காரணமாக உள்ளது. பகலில் மறைந்திருந்துவிட்டு இரவில் இரை தேடும் ஆபிரிக்க நத்தைகள் பயிர்கள், அலங்காரச் செடிகள், புல் பூண்டுகள் என்று எல்லாவற்றையும் தின்று தீர்த்து வருகின்றன.

ஒரு தாவரத்தில் உள்ள நோய்க்கிருமிகளை இன்னொரு தாவரத்துக்கு காவிச் செல்கின்றன. இவற்றோடு மனிதர்களில் மூளை மென்சவ்வு ஒவ்வாமையை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி புழுக்களை இவை காவித் திரிவதும் அறியப்பட்டுள்ளது. ஆபிரிக்க நத்தைகள் பயிர்ச்செய்கைக்கு, உயிர்ப்பல்வகைமைக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் இலங்கை அரசாங்கம் இதை அந்நிய ஊடுருவல் இனமாக அறிவித்துள்ளது.

ஆபிரிக்க நத்தைகளைக் கட்டுப்படுத்துவதற்குத் திணைக்களங்களுக்காகக் காத்திராமல் பொது அமைப்புகளும், பொதுமக்களும் முன்வரவேண்டும். உப்பு நீர் கரைசல் உள்ள பாத்திரம் ஒன்றில் இவற்றை அழுத்துவதன் மூலம் சுலபமாக அழிக்க முடியும். ஆபிரிக்க நத்தைகள் நோய்க்காவிகளாகவும் இருப்பதால் வெறும் கைகளால் நேரடியாகத் தொடாமல் இலைகள், கடதாசிகள் போன்றவற்றால் இவற்றைப் பிடிப்பதே பாதுகாப்பானது.இதனை ஒரு சமூகக்கடமையாகக்கருதி நாம் விரைந்து செயல்படவில்லை எனில் ஏற்கெனவே பாரிய பொருளாதார சீரழிவுக்கு, சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு ஆளாகியிருக்கும் இலங்கை இந்நத்தையாலும் பெரும் சீரழிவுகளைச் சந்திக்க நேரும் என்றும் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *