மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் பெட்டியை உடைத்து 750 திரிபோஷா பக்கற்றுக்களை திருடிச் சென்ற இருவரை நேற்று (12) கைது செய்துள்ளதாக மட்டு. பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்திற்கு திரிபோஷா பக்கற்றுக்கள் அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 5 ஆம் திகதி நிறுத்தி வைக்கப்பட்ட சரக்கு ரயில் பெட்டியை உடைத்து 750 திரிபோஷா பக்கற்றுக்கள் திருட்டுப்போயிருந்தது. சம்பவம் தொடர்பில் 7ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, திருடப்பட்ட திரிபோஷா பக்கற்றுக்களை இருவர் விற்பனை செய்துவருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில், மட்டு தலைமையக பொலிஸார் நேற்று இரவு கருவப்பங்கோணி மற்றும் கூழாவடி பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இருவரை அவர்களது வீடுகளில் வைத்து கைதுசெய்ததுடன், திருடப்பட்ட திரிபோஷா பக்கற்றுக்களை மீட்டுள்ளனர்.