ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை வேறு தரப்பினருக்கு மாற்ற முயற்சிப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கணக்குகளில் உள்ள பணத்தை மூன்றாம் தரப்பினருக்கு அனுப்ப எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அனுசரணை வருமானம் மற்றும் ஏனைய நிதிகளை அமெரிக்க டொலர்களில் பெறுகிறது. நாணய மாற்று விகிதத்தில் ஏற்படும் மாற்றங்களை பயன்படுத்தி அமெரிக்க டொலர் கணக்குகளில் பணம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றாட நடவடிக்கைகளை பராமரிக்க நாட்டிலுள்ள இலங்கை கிரிக்கெட் சங்கம் மற்றும் பங்குதாரர்களுக்கு பணம் செலுத்துவதற்கு பணம் தேவைப்படுகிறது, அதற்கு தேவையான டொலர்கள் அமெரிக்க டொலர்கள் கணக்குகளில் இருந்து ஶ்ரீலங்கா ரூபாயில் உள்ள கணக்குகளுக்கு மாற்றப்படும்.
எனவே, “ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கணக்குகளில் இருந்து பணத்தை வௌியில் எடுக்கப் பார்க்கிறார்கள்…” என்று கூறுவது தவறான தகவல் என ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.