சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட இஞ்சி

ByEditor 2

Jul 3, 2025

புத்தளம், கற்பிட்டி – ஏத்தாளை களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை உலர்ந்த இஞ்சியுடன் சந்தேக நபர்கள் மூவர் நேற்று (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வடமேற்கு கடற்படைக்கு சொந்தமான இலங்கை விஜய கடற்படை கப்பல் கற்பிட்டி – ஏத்தாளை களப்பு பகுதியில் சிறப்பு ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டது. 

குறித்த களப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட மூன்று டிங்கி படகுகளை கடற்படையினர் சோதனையிட்டுள்ளனர். 

இதன்போது, குறித்த டிங்டி படகுகளில் சட்ட விரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 33 பொதிகளில் அடைக்கப்பட்ட 979 கிலோ கிராம் உலர்ந்த இஞ்சி மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் மூவரையும் கடற்படையினர் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 முதல் 41 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் இவர்கள் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட உலர்ந்த இஞ்சி மற்றும் மூன்று டிங்கி படகுகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *