வெடிமருந்து கிடங்கு களஞ்சியசாலைகள் உடைக்கப்பட்டு, வெடிபொருட்கள் திருடப்பட்டுள்ளதாக அம்பாறை பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அம்பாறை, தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேன கிராமத்தில் அமைந்துள்ள வெடிபொருள் களஞ்சியசாலைகளே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன.
இதுவரை கிடைத்த தகவல்களின்படி, 45 கிலோ கிராம் ஜெல் குச்சிகள், 10 மீட்டர் சர்வீஸ் கயிறு, 25 கையெறி குண்டுகள் மற்றும் 4,100 டெட்டனேட்டர்கள் திருடப்பட்டுள்ளன.
தனியார் கல் ஆலை உரிமையாளர்கள் இந்த இடத்தில் வெடிப்பொருள் களஞ்சியயை வைத்துள்ளனர். அவற்றுக்கு பாதுகாப்பு வழங்க ஒரு பொலிஸ் புறக்காவல் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிப்பொருள் களஞ்சியசாலைக்கான ஒரு சாவி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது, மற்றொரு சாவி உரிமையாளரிடம் உள்ளது என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
இந்த மூன்று கிடங்குகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டுள்ளதை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது, இங்கு விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன, 5 பொலிஸ் குழுக்கள் மற்றும் பொலிஸ் நாய்களுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
