5 பேருக்கு மரண தண்டனையும், இருவருககு ஆயுள் தண்டனையும் விதிப்பு

ByEditor 2

Apr 28, 2025

2012 ஆம் ஆண்டு கொழும்பின் மட்டக்குளி பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகில்  இளைஞன் ஒருவரை பொல்லுகளால் தாக்கி கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

இதே குற்றச்சாட்டில் குற்றவாளிகளாகக் கருதப்பட்ட மேலும் இரண்டு பிரதிவாதிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. 

குற்றம் நடந்த போது இரண்டு பிரதிவாதிகளும் 18 வயதுக்குட்பட்டவர்களாக இருந்ததால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிபதி அறிவித்துள்ளார். 

நீண்ட விசாரணைக்குப் பிறகு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க, பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி அரசு தரப்பு நிரூபித்துள்ளதாகக் கூறியுள்ளார். 

அதன்படி, பிரதிவாதிகள் மூன்று குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளிகளாக அடையாளங்காணப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். 

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒரு குற்றவாளியும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் மற்றொரு குற்றவாளியும் தந்தை மற்றும் மகன் என்பது விசாரணையின் போது தெரியவந்தது. 

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏனைய இரண்டு பிரதிவாதிகள் விசாரணைக்கு இடையே இறந்துவிட்டனர். 

2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி மட்டக்குளி பகுதியில் கோவில் ஒன்றுக்கு அருகில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறு தீவிரமடைந்ததை அடுத்து, 21 வயது திருமணமாகாத இளைஞரை விக்கெட் பொல்லுகள் மற்றும் தடிகளால் அடித்துக் கொன்றது உட்பட மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *