யாழ் அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் மனித எலும்புகள்

ByEditor 2

Mar 5, 2025

யாழ்ப்பாணம் – அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்புக்கு மேலதிகமான கண்காணிப்பு பணிக்கு மயான அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஐவரை நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கினுடைய கலந்தாய்வு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் தலைமையில் நேற்று (04) நடைபெற்றது.

ஐவரங்கிய குழு நியமனம்

இந்த கலந்துரையாடலில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பிலும், முறைப்பாட்டாளர் சார்பிலும் சட்டத்தரணிகளும், நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மயான அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குறித்த எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு உரிய வகையில் வழங்கப்பட வேண்டும் என்றும் பொலிஸ் பாதுகாப்புக்கு மேலதிகமாக குறித்த மயானத்தினுடைய அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு பணியை மேற்பார்வை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணிகளால் கோரப்பட்டது.

இதனை ஆராய்ந்த நீதவான் மயான அபிவிருத்தி சங்கத்தின் சார்பில் ஐந்து உறுப்பினர்களை பணியில் ஈடுபடுத்த அனுமதி வழங்கியதுடன் வழக்கு தொடர் விசாரணைக்காக திகதியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *