’நிகழ்நிலை சட்டத்தை எப்போது திருத்த எதிர்பார்க்கிறது’

ByEditor 2

Mar 5, 2025

இலங்கையில் காணப்படும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை இந்த அரசாங்கம் எப்போது திருத்த எதிர்பார்க்கிறது?இந்தச் சட்டத்தின் கீழ் எத்தனை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்? கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் எத்தனை குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் தண்டிக்க பட்டுள்ளார்கள்?என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசிடம்  கேள்வி எழுப்பினார்.
 
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) இவ்வாறு கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறுகையில்,
 
இலங்கையின் அதியுயர் சட்டமான அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் ஊடாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு பாதகம் விளைவிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை திருத்துவது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய தேர்தல் முழக்கங்களில் ஒன்றாகும். மேலும் புத்தாக்கம் மற்றும் உயர் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி “டிஜிட்டல் பொருளாதாரத்தை” அறிமுகப்படுத்துவது அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக குறிப்பிடப்பட்டாலும், முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் மூலம் முதன்மை நோக்கம் அதுவல்ல என்று தெரிகிறது. எனவே, நான் பின்வரும் கேள்விகளைக் கேட்கிறேன், சரியான பதில்களையும் விளக்கங்களையும் அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

 இலங்கையில் காணப்படும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை இந்த அரசாங்கம் எப்போது திருத்த எதிர்பார்க்கிறது? இச்சட்டம் திருத்தப்படும் வரை இச்சட்டத்தை வலுவற்றதாக மாற்றுவீர்களா? அவ்வாறு இல்லை என்றால், ஏன்? இந்த சட்டத்தில் திருத்தங்களை செய்வதற்கு அல்லது முழுவதுமாக ரத்து செய்வதற்கு அரசாங்கம் இதுவரை என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளன?

  இந்தச் சட்டத்தின் கீழ் எத்தனை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்? அவர்களில், எத்தனை சந்தேக நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்? கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் எத்தனை குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் தண்டிக்க பட்டுள்ளார்கள்? என்று வினவினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *