ஜனாதிபதி நான்கு நாள் ஜப்பான் விஜயம்

ByEditor 2

Mar 2, 2025

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 22ஆம் திகதி அளவில் ஜப்பானுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது, இருநாட்டு பொருளாதார ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, வெளியுறவுத் துறைக்கான ஜப்பான் பாராளுமன்ற துணை அமைச்சர் இகுய்னா அகிகோவை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத், இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது அமர்வின் பக்க நிகழ்வாக இடம்பெற்ற சந்திப்பின் போது, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஜப்பான் விஜயம் குறித்தும் பேசப்பட்டுள்ளது.

சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் இலக்கை அடைவதில் ஜப்பானுக்கு ஒரு முக்கிய பங்காளியாக இலங்கை உள்ளது என்றும், பிராந்தியம் முழுவதும் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை அடைய இலங்கையடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற ஜப்பான் விரும்புவதாக இதன்போது வெளியுறவுத் துறைக்கான பாராளுமன்ற துணை அமைச்சர் இகுய்னா அகிகோ குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை மக்களைக் கருத்தில் கொண்டு ஜப்பான் தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்கும் என்றும், நிறுத்தப்பட்ட பல திட்டங்களை மீண்டும் இலங்கையில் ஆரம்பிக்க உள்ளோம்.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்புக்கொண்ட சீர்திருத்தங்கள் நிலையான முறையில் செயல்படுத்தப்படுவதையும், முழுமையான பொருளாதார வளர்ச்சிக்கான பாதையில் நிலையான முன்னேற்றத்தையும் ஜப்பான் ஆவலுடன் எதிர்நோக்குவதாகவும் துணை அமைச்சர் இகுய்னா அகிகோ கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத், ஜப்பான் இலங்கைக்கு நீண்டகாலமாக அளித்து வரும் ஆதரவிற்கும், அரசியல், பொருளாதாரம் மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

எனினும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஜப்பான் விஜயத்திற்கான திகதி இவ்வாரம் தீர்மானிக்கப்பட உள்ளதுடன், அதனை தொடர்ந்து ஐரோப்பாவிற்கான விஜயத்தில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *