பெருந்தோட்ட மக்களுக்கு புதிய வீடுகள்!

ByEditor 2

Jan 23, 2025

2025 ஆம் ஆண்டுக்குள் பெருந்தோட்ட மக்களுக்காக 4,350 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் குத்தகைக்கு விடப்பட்ட பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சில் நேற்று (21) நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட மக்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி அவர்களை வறுமையிலிருந்து விடுவிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அமைச்சர் இதன்போது கூறியுள்ளார்.

முன்னர், அரசியல் சலுகைகளின் அடிப்படையில் வீடுகள் கட்டப்பட்டு பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன என்றும், புதிய அரசாங்கத்தின் கீழ், இந்த புதிய வீடுகள் தகுதியான பெருந்தோட்ட மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் அமைச்சர்  வலியுறுத்தினார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் வீட்டு உரிமையைப் பொறுத்தவரை, அது தேசிய அளவில் 83.75% ஆகவும், பெருந்தோட்டங்களில் 5.6% ஆகவும் உள்ளதுடன், இது மிகக் குறைந்த எண்ணிக்கையாகும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேசிய வறுமை விகிதம் 11.9% ஆக இருந்தாலும், பெருந்தோட்டங்களில் வறுமை விகிதம் 29.7% ஆக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *