பெரும்போகத்திற்காக அரிசி இருப்புக்களை பராமரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது

ByEditor 2

Jan 20, 2025

எதிர்வரும் பெரும்போகத்திற்காக அரிசி இருப்புக்களை பராமரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதால், மீண்டும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (19) பிற்பகல் ஹொரணை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு  உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு நிவாரணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.

தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட ஹொரணை தேர்தல் தொகுதியின் கட்சிக் கூட்டம் நேற்று பிற்பகல் ஹொரணை பொகுனுவிட்டவில் உள்ள ஜனசேத விளையாட்டரங்கில் நடைபெற்றது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவும் கலந்து கொண்டிருந்தார்.

ஜனாதிபதி இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“அரசாங்கம் எவ்வளவு காலம் செயற்படும்? 5 வருடங்களுக்கு”

அப்படியானால், நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம்.

பொதுவாக, நம் நாட்டில் அரசியலில் தோற்ற பிறகு, அந்தக் குழுக்கள் கொஞ்சம் கூச்சலிடுவார்கள்.

ஆனால் அது கொஞ்ச காலத்திற்கு தான். இப்போதும் கூட, “அரசாங்கம் நிலையாக இருப்பதற்கு முன்பு அதை சீர்குலைக்க முடியுமா?” என்று கூச்சலிடுகிறார்கள்.

“நாங்கள் அவர்களுக்கு கூற விரும்புகிறோம் கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அது கனவாகவே இருக்கும். 

அரிசி பிரச்சினை உள்ளது. ஏற்றுக்கொள்கிறோம். தட்டுப்பாடு ஏற்பட்டது.

தரவுகள் இன்மையே அதற்கு காரணம். நாட்டில் எவ்வளவு அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. எவ்வளவு நுகரப்படுகிறது. எவ்வளவு பற்றாக்குறை ஏற்படுகிறது என்பது தொடர்பில் தரவுகள் இல்லை. 

நான் உறுதியளிக்கிறேன். நாட்டில் இனி ஒருபோதும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது.

இந்த பெரும்போகத்தில் நெல் இருப்பது தனியாரிடம் மாத்திரமல்ல அரசிடமும் நெல் தொகையை வைத்திருப்பதற்கான வேலைத்திட்டத்தை நாம் மேற்கொண்டுள்ளோம்.

நிர்ணய விலையை விட ஒரு ரூபாய் அதிகரித்தும் அரியை விற்பனை செய்ய இனி இடமளிக்க மாட்டோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *