ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு இன்று (16) காலை இந்திய ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.
குதிரைப்படை அணிவகுப்புடன் ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரினால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.இதன்போது பூரண அரச மரியாதையுடன் 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வரவேற்கப்பட்டார்.அதனைத் தொடர்ந்து இந்திய இராணுவத்தின் அணிவகுப்பு மரியாதை வழங்கி அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பின், இருதரப்பு பிரதிநிதிகளும் இரு நாட்டுத் தலைவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டனர்.ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வரவேற்பு நிகழ்வில் இந்திய இராஜதந்திரிகள் பலரும் கலந்து கொண்டனர்.உத்தியோகப்பூர்வ வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, ராஜ்கொட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவுச்சின்னத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் தனது முதலாவது உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு விஜயத்தை நினைவுகூரும் வகையில் ராஜ்கொட்டில் உள்ள காந்தி தர்ஷன் வளாகத்தில் அசோக மரக்கன்று ஒன்றை நாட்டிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, விருந்தினர் புத்தகத்திலும் கையொப்பமிட்டார்.அதைத்தொடர்ந்து தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றுள்ளது. மேலும், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிற்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று இரவு நடைபெறவுள்ளது.