சடலத்தை மறைத்து வைத்திருந்த இருவர் கைது

ByEditor 2

Dec 15, 2024

மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் சடலத்தை மறைத்து வைத்த இருவரை ஊரகஸ்மங்ன்ஹந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஊரகஸ்மன்ஹந்திய, வல்இங்குருகெட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த நபர், கடந்த 9ஆம் திகதி மாத்தறை பகுதிக்கு கறுவப்பட்டை அரைப்பதற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் வீடு திரும்பாததால், அது தொடர்பில் அவரது உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

பின்னர், அந்த நபரின் சைக்கிள் ஒரு வயல் அருகே கண்டெடுக்கப்பட்டது.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, குறித்த நபர் மண்டோரவல பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று, சைக்கிளை அங்கேயே வைத்துவிட்டு, அருகிலுள்ள வயல்வெளிக்கு சென்றுள்ளதாக  தெரியவந்துள்ளது.  

இதனையடுத்து, வயல்வெளிக்கு சென்ற பொலிஸார், அப்பகுதியில் உள்ள கழிவறை குழியில் இருந்து உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டுள்ளனர். 

அதேவேளை, அப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமாக மின்சார வேலிகளை பொருத்தியிருந்த இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த நபர் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் சந்தேக நபர்கள் இருவரும் உயிரிழந்தவரின் சடலத்தை அருகில் உள்ள கழிவறை குழியில் வீசியுள்ளதாகவும்  தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஊரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *