இ-பாஸ்போர்ட் சம்பவம் குறித்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

ByEditor 2

Dec 4, 2024

கடந்த அரசாங்கத்தின் போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு 05 மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டு கொள்வனவுக்கான விலைமனு வழங்கப்பட்ட விதம் தொடர்பில் தேசிய கொள்முதல் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்த வௌிநாட்டு கடவுச்சீட்டுக் கொள்வனவு தொடர்பான விலைமனு வழங்கப்பட்ட விதத்தை சவாலுக்குட்படுத்தி எபிக் லங்கா பிரைவேட் நிறுவனம் தாக்கல் செய்த மனு நேற்று (03) சீராக்கல் மனு ஊடாக அழைக்கப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்  சுமதி தர்மவர்தன இந்த அறிவித்தலை வழங்கினார்.  

இந்த மனு முகமது லஃபார் தாஹிர் மற்றும் பி. குமாரன் ரத்னம் ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது, ஐந்து மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கான விலைமனு வழங்கப்பட்ட விதம் தொடர்பில் தேசிய கொள்முதல் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணை தொடர்பான கண்காணிப்புகளை சமர்ப்பிக்க அந்த குழு ஒரு வார கால அவகாசம் கேட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

இதன்படி, இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை அறிவிக்க திகதி ஒன்றை பெற்றுத்தருமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது, குறித்த கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதைத் தடுத்து நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீக்குமாறு தமது வாடிக்கையாளர்கள் விடுத்துள்ள கோரிக்கையை பரிசீலிக்க திகதி ஒன்றை பெற்றுத்தருமாறு பிரதிவாதி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்திய ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனகீஸ்வரன் தெரிவித்தார்.

அதன்படி, இது தொடர்பான விசாரணையை ஜனவரி 23 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *