திருடனை பிடித்த பொது மக்கள்!

ByEditor 2

Nov 29, 2024

திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பொது மக்கள் இராணுவத்தினரின் உதவியுடன் பொலிசாரிடம்  ஒப்படைத்துள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையாளபுரம் பகுதியில் குறித்த சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது.

வீதியால் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம் குறித்த சந்தேக நபரும் மற்றொரு சந்தேக நபரும் தொலைபேசியை கேட்டு உதவி கோரியுள்ளனர்.

தமது மோட்டார் சைக்கிளில் எரிபொருள் தீர்ந்துவிட்டதாகவும் நண்பர்களின் உதவியை கோர தொலைபேசியை கோரியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பெண் உதவ முன்வந்தபோது அப்பெண்ணின் கைப்பையை பறிக்க முற்பட்டுள்ளனர். இதன்போது உதவி கோரி குறித்த பெண் சத்தமிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் இராணுவ முகாம் இருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு படையினர் சென்று அப்பெண்ணிற்கு உதவ முயன்றனர்.

அச்சமயம் ஒருவர் குறித்த பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்துத் தப்பி சென்றுள்ளதாக அப்பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மற்றைய சந்தேக நபரை இராணுவத்தினர் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்தில் பொதுமக்கள் பலரும் கூடியிருந்ததுடன், மற்றைய சந்தேக நபரை தேடி வருகின்றனர். பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் நடந்த பகுதியில் பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெறுவதாகவும், அப்பகுதியில் மின்விளக்கு ஒன்றை பொருத்தி உதவுமாறும் பொது மக்கள் இராணுவத்தினரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

உடனடியாக அப்பகுதியில் மின்விளக் கொன்றை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக குறித்த இராணுவ முகாமின் பொறுப்பு நிலை அதிகாரி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *