சனத் நிஷாந்தவின் வெற்றிடத்திற்கு ஜகத் பிரியங்கர!

Byadmin

Jan 25, 2024

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்தார்.

1975 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி சிலாபத்தில் பிறந்த சனத் நிஷாந்த பெரேராவிற்கு ஒரு மூத்த சகோதரியும் மூன்று சகோதரர்களும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் ஒரு சகோதரர் தற்போது இறந்துவிட்டார். சனத் நிஷாந்த சிலாபம் சென். மேரி ஆண்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர்.

1997 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைக்கு போட்டியிட்ட போதிலும் அவரால் வெற்றிபெற முடியவில்லை.

தேர்தலில் வெற்றி பெற்று தலைவரான சரத் ஹேமச்சந்திர படுகொலை செய்யப்பட்டதன் பின்னர், ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபை உறுப்பினராக பணியாற்றும் வாய்ப்பு சனத் நிஷாந்தவுக்குக் கிடைத்தது.

அதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு வடமேற்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற அவர், 2009 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலிலும் வெற்றி பெற்றார்.

2010 இல் அவர் வடமேற்கு மாகாண சபையின் மீன்பிடி, நெடுஞ்சாலைகள் மற்றும் மின்சக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அண்மையில் நடைபெற்ற வடமேல் மாகாண சபைத் தேர்தலில் 62,996 விருப்பு வாக்குகளைப் பெற்று புத்தளம் மாவட்டத்தில் முதலாவதாகத் தெரிவான அவர், மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றார்.

இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் 80,082 விருப்பு வாக்குகளைப் பெற்ற சனத் நிஷாந்த பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் கடற்றொழில் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றதுடன், அதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் இருந்து அதிகூடிய வாக்குகளை பெற்ற வேட்பாளரானார்.

அவர் இறக்கும் போது தற்போதைய அரசாங்கத்தில் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த சனத் நிஷாந்தவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கடந்த தேர்தலில் போட்டியிட்ட ஜகத் பிரியங்கர தகுதி பெற்றுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *