தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து T 750, T 709 மற்றும் T 200 உரங்களின் விலைகளை 2,000 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (16) இந்த தீர்மானத்தை எடுத்ததாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, சந்தையில் கிடைக்கும் தேயிலை உரத்தின் விலை 50 சதவீதத்தால் குறைக்கப்படும்.
தற்போது சந்தையில் மேற்கூறிய உரங்களின் ஒரு மூட்டையின் விலை 13,000 ரூபாயை தாண்டியுள்ளது.
இதனால், T 750 மற்றும் T 709 தேயிலை உரங்களின் மூட்டை ஒன்றின் விலையை 7,735 ரூபாவாகவும், T 200 உரத்தின் விலை 5,500 ரூபாயாக குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு சொந்தமான கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் மற்றும் இலங்கை உர கம்பனி ஆகியவற்றின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேராவிற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த உரச் சலுகை அனைத்து சிறு மற்றும் நடுத்தர தேயிலை உற்பத்தியாளர்களுக்கும் வழங்கப்படவுள்ளதுடன், பாரியளவிலான தேயிலை உற்பத்தி நிறுவனங்களுக்கு மேற்கூறிய அனைத்து உர வகைகளையும் 9,735 ரூபாவிற்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இன்று காலை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில், தேயிலை உற்பத்தி செய்யும் எட்டு மாவட்டங்களின் தேயிலை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் தேயிலை பயிர்ச்செய்கை தொடர்பான அனைத்து அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
அரசாங்கத்திற்கு சொந்தமான உர நிறுவனங்களினால் உற்பத்தி செய்யப்படும் தேயிலை பயிர்ச்செய்கைக்கான விசேட உரங்கள் தரம் வாய்ந்தவை என பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.
இந்த 2,000 ரூபா உரச் சலுகைக்கு மேலதிகமாக செலவிடப்பட்ட தொகை 1200 மில்லியன் ரூபாவாகும், அந்தத் தொகையை தேயிலை சபை ஏற்க வேண்டும்.
தேயிலை கைத்தொழில் முன்னேற்றத்திற்காக எமது நாட்டில் தேயிலை பயிர்ச்செய்கைக்கு உரமிடுவதை கட்டாயமாக்கும் நடவடிக்கையாக இந்த நிவாரணம் வழங்கப்படுவதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
தேயிலை உரங்களின் விலைகள் குறைப்பு
