சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட மொத்தம் 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தலைவர் பொறுப்பில் தோனி தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
8 வீரர்களை விடுவித்ததன் மூலம் புதிய வீரர்களை அணிக்கு எடுப்பதற்கான சென்னை சூப்பர் கிங்ஸின் கையிருப்பு தொகை ரூ. 32.2 கோடியாக உள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக அணிகள் தயாராகி வருகின்றன.
அதற்கு முன்னதாக அடுத்த மாதம் 19 ஆம் திகதி ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களிடம் உள்ள வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம், அல்லது விடுவித்துக் கொள்ளலாம்.
மேலும் வீரர்களை பரிமாறிக் கொள்ளவும் விதிகள் உள்ளன. இதன் அடிப்படையில் அணிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
லக்னோ அணியின் தலைவராக இருக்கும் கே.எல். ராகுலை அந்த அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது.
2022 சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் மும்பை அணிக்கு திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை அணிக்காக விளையாடி வந்த அம்பதி ராயுடு தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். இதேபோன்று 2024 இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண டி20 போட்டிக்கு தயாராகுவதற்காக ஐபிஎல் தொடரை தவிர்ப்பதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்ததை தொடர்ந்து அவரும் அணியில் இருந்து விலகியுள்ளார்.
இவ்விரு வீரர்களுடன் பிரிட்டோரியஸ், சேனாபதி, பகத்வர்மா, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா ஆகியோருடன் மொத்தம் 8 வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் விடுவித்துள்ளது.
தலைவராக அடுத்த சீசனிலும் மகேந்திர சிங் தோனியே தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு 8 வீரர்களை விடுவித்ததன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸின் கையிருப்பு தொகை ரூ. 32.2 கோடியாக உயர்ந்துள்ளது.
இதனால், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் முக்கிய ஆட்டக்காரர்களை சென்னை அணி எடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.