மதுரங்குளி – முக்குத் தொடுவா பிரதேசத்தில் மின்சாரத்தை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இருவரை மணல் விற்பனை செய்யும் வர்த்தகர் உள்ளிட்ட சிலர் கடுமையாக தாக்கியுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த இருவரும் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான புத்தளம் மின்சார அதிகார சபை அலுவலகத்தில் மின் இணைப்பை துண்டிக்கும் பணியில் ஈடுபடும் இரண்டு ஊழியர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மணல் விற்பனை செய்து வரும் வர்த்தகரின் வியாபார தளத்தில் மின்சாரத்தை துண்டித்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போதே சந்தேக நபர்கள் குறித்த இருவரையும் மறைத்து தாக்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மின்சாரத்தை துண்டிக்கும் ஊழியர்கள் இருவரும் குறித்த இடத்திற்கு மின்சாரத்தை துண்டிப்பதற்காக சென்றபோது, அங்கிருந்த பெண்ணொருவரிடம் தெரிவித்துவிட்டே மின்சாரத்தை துண்டித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
எனினும், மின்சார பட்டியலை செலுத்திவிட்டு தங்களுக்கு அறியத்தந்தால் மீண்டு வந்து மின் இணைப்பை வழங்குவதாகவும் அந்த ஊழியர்கள் அங்கிருந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சாரத்தை துண்டித்த ஊழியர்கள் மீது கொடூர தாக்குதல்
